நியூசிலாந்து நாட்டில் ஓடுபாதையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி 16 விமானங்களை தாமதப்படுத்திய வெறி பிடித்த நாயை பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியின்றி சுட்டுக் கொன்றுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள பரபரப்பு மிகுந்த ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்தில் உள்ள ஓடுபாதைக்குள் நேற்றிரவு நுழைந்த ஒரு நாய் வெறித்தனமாக குறுக்கும் நெடுக்குமாக ஓடி அமளியில் ஈடுபட்டது.
இதனால், அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 16 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டன. கிறுக்குத்தனமாக ஓடித் திரியும் அந்த நாயை பிடிக்க முயன்ற சிலரது முயற்சி பலனளிக்கவில்லை. மேலும், அடர்த்தியான இருட்டில் தன்னை பிடிக்க முயன்றவர்கள் மீது பாய்வதற்கும் அந்த நாய் தயாராக இருந்தது.
நிலைமை மேலும் விபரீதம் ஆவதை தவிர்க்கும் வகையில் ஆக்லாந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியின்றி அந்த நாயை சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.