மாகாண சபை தேர்தலினை தள்ளிப் போட எவ்வித தேவைப்பாடும் இல்லை எனவும், அரசாங்கம் மாகாண சபை தேர்தலினை நடாத்தாது தள்ளிப்போடுவதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மை நிலைப்பாடும் இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவ்வாறு, மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றில் புதிய சட்டமொன்றினை கொண்டுவந்து அதில் 2/3 பெரும்பான்மையினைப் பெற்று சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதற்கு முன்னர் தேர்தலினை ஒத்திவைத்தது பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்திற்கு அமையவே எனவும், தற்போது அவ்வாறு தேர்தலினை ஒத்திவைக்க நாட்டில் அவசர நிலைகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலக்கெடு நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.