சைட்டம் தொடர்பில் கோப் குழு இரண்டு நிலைபாட்டில்…

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் கோப் குழு இரண்டாக பிரிந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் சார்பாக கருத்துத் தெரிவித்திருந்தது.

அரசினை பிரதிபலித்து நிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மௌனித்து நிற்கும் அதேவேளை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிபலித்து நிற்கும் மஹிந்தானந்த அலுத்கமகே கோப் குழுவிலிருந்து எழுந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கோப் குழு கூடியிருந்த போதே மேற்குறித்த நிலைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

2008 ஆம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்கத்தினால் சைட்டம் தனியார் கல்வி நிறுவகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு அப்போது உயர் கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி. திஸாநாயக்க அவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்நிறுவனத்தின் வைத்திய பட்டங்களுக்கு சட்ட ரீதியிலான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)