அமைச்சர்களாக பதவி வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தமது பதவிகளை கைவிட்டு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து தமது தீர்மானம் குறித்து தெளிவுப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சு பதவிகளில் இருந்து விலகும் இவர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணையாது, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தனித்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.
இதனிடையே கூட்டு அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தால் மக்களின் அதிருப்திக்கு உள்ளாக கூடும் என்பதால் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தமது பதவியை கைவிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ள அமைச்சர்களை தமது பக்கம் இழுக்க கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.