வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…

வில்பத்து சரணாலயம் குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு, முசலி மக்கள் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

வில்பத்து வன சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பற்ற வனம் என அந்தப் பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சுமார் 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென, முசலிப் பிரதேசத்தின் பல்வேறு அமைப்புக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதிக்கு அவசரக்கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளன.

மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீனை, அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உட்பட மக்கள் சார்ந்த அமைப்புக்கள் கொழும்பில் சந்தித்து தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகளைத் தெரிவித்துள்ளனர்.

முசலிப் பிரதேசத்தின் எல்லைக்குட்பட்ட 28 கிராமங்களில் 10 கிராமங்களுக்கு குறித்த அறிவித்தல் மூலம் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள இப்பிரதேச மக்கள், தங்களுக்குச் சொந்தமான பரம்பரைக் குடியிருப்புக் காணிகளும் மேய்ச்சல் தரைகளும், விவசாய நிலங்களும், இப் பிரகடனத்தின் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேலும் குற்றஞ்சாட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)