UPDATE – விமல் வீரவங்சவினது மேன்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு..

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது.

மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இரண்டு நீதியரசர்களில் ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபரை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் என்பன பிணை வழங்க மறுத்தமை சட்டத்திற்கு முரணானது எனவும் தனக்கு பிணை வழங்குமாறும் கோரி விமல் வீரவங்ச குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்குமாறு கோரி நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு 9 கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் வீரவங்ச கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)