சசிகலாவை பார்க்க செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைப் பார்க்க இனி ஆதார் அட்டை அவசியம் என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

சசிகலா சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளைப் பார்க்க வருவோரிடம் ஆதார் அட்டை அவசியம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு விதித்துள்ளது.

இந்த அறிவிப்பை கர்நாடக அரசு பின்பற்ற முடிவு செய்துள்ளது.

இதன்படி ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாக உயர் அதிகாரிகள் பின்பற்ற மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பை கர்நாடக டிஜிபி மாநிலத்தில் உள்ள சிறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக மாநில உள்துறைச் செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க வருவோர் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். அதன் விவரங்கள் சிறைப் பதிவேட்டில் குறித்து வைக்கப்படும்.

இம்மாதிரியான நடைமுறைகள் சிறைக்கைதிகளின் செயல்பாட்டினை அறிய உதவும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய நடைமுறையால் இனிவரும் காலங்களில் பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவைச் சந்திக்க வருபவர்கள் ஆதார் அடையாள அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும்.