மண்ணோடு மண்ணாகிப்போன சசிகலாவின் சபதம்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்வதற்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதாவின் சமாதி முன்னிலையில் 3 சபதங்களை மேற்கொண்டார்.

சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என்பதே அவர் மேற்கொண்ட சபதம் ஆகும்.

அதன்படியே எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பின் வாயிலாக முதல்வராக பதவியேற்றதன் மூலம் சசிகலாவின் சபதம் நிறைவேறியது என கூறப்பட்டது.

இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஆர்கே நகர் தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த சின்னத்தை மீட்டெடுத்து தனது பெரும்பான்மையை தமிழகத்தில் நிரூபிக்க வேண்டும் என சசிகலா உத்தரவின் பேரில் தினகரன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போம் எல்லாம் தலைகீழாக மாறிப்போய்விட்டது.

ஆர்கே நகரில் நடைபெற்ற பணப்பட்டுவாடா பிரச்சனையால் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் வருமான வரித்துறையின் பிடிக்குள் சிக்கினர்.

மேலும், டிடிவி தினகரன் மீது புகார்கள் எழுந்ததையடுத்து, கட்சிக்குள் உட்பூசல்கள் ஆரம்பித்தன.

கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் சென்றுவிடக்கூடாது என போர்க்கொடி தூக்கிகொண்டு தனியாக வந்த பன்னீர் செல்வத்தின் கருத்தினை முதல்வர் எடப்பாடி தலைமையிலான சில அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டு, பன்னீர் செல்வத்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தினகரன் மற்றும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளோம் என அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் சசிகலா அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ள நிலையில், தற்போது நடக்கும் பிரச்சனைகள் குறித்து தினகரன் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

தனது தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்ற எண்ணத்தில் தான் தனது உறவினரான தினகரனை துணைபொதுச்செயலாளராக நியமித்துவிட்டு, சிறைக்குள் இருந்தவாறு தமிழக அரசியலை நடத்தி வந்தார் சசிகலா.

தற்போது, இவர்களே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருப்பதால் சசிகலா மேற்கொண்ட சபதம் ஜெயலலிதாவின் சமாதியில் மண்ணோடு மண்ணாகி போய்விட்டது.