இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல் – கையெழுத்து வேட்டை

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டம் அமெரிக்காவில் வலுப்பெற்றுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தலைமையில் இதற்கான கையொப்ப வேட்டை போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனிதநேயத்துக்கு எதிரான குற்றம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பலரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வீடு வீடாக சென்று கையொப்பங்களை திரட்டுகின்றனர். கடந்த 22ஆம் திகதிவரை சுமார் 2 இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், இணையம் மூலமான கையொப்ப திரட்டல்களும் இடம்பெறுவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிலும் இந்நடவடிக்கை தொடர்கின்ற நிலையில், இப்போராட்டத்தை அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சே கிளாக் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தின் முன்னால் ஆரம்பித்து வைத்தார்.

தமிழர்களின் துன்பங்களுக்கும், கண்ணீருக்கும் முடிவுக்கு வரவேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.