தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொரளை, கெம்பல் மைதானத்தில் நேற்று(01) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்தபோது மீதொட்டமுல்ல குப்பை மேடு 15m உயரத்தில் காணப்பட்டது. அது தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது 45m ஆக காணப்பட்டதெனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் போது மீதொட்டமுல்ல குப்பை மேடு 3m உயரம் வரை மாத்திரமே உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு முன்னாள் ஜனாதிபதியின் பாவம் எனவும், அதனை தற்போதைய அரசாங்கத்தின் மீது திணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என தான் கேட்டுக் கொள்வதாக தெரிவித்த அவர், கடந்த அரசியலில் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் 2005ஆம் ஆண்டு பெருந்தொகை பணத்தை வழங்கிய மஹிந்தவை வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா இதன் பொது தெரிவித்திருந்தார்.
அண்மையில் சரத் பொன்சேகாவிற்கு இராணுவப் பதவியொன்று வழங்க அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.