நாட்டுக்கு பொருளாதார நலன்களைக் கொண்டு வருவதே தவிர நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளிலும் எந்தவொரு நாட்டுடனும் கையொப்பம் இடப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(03) நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் மின்னுற்பத்தியின்போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக பொருத்தமான கலப்பு மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.