இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி ஜூன் 4ம் திகதி பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்சமாம் உல் ஹக் கூறுகையில், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் நாங்கள் இங்கிலாந்துக்கு செல்லப் போவதில்லை. எங்களது முதன்மையான இலக்கு சாம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதுதான்.
கடந்த 2004ம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இன்சமாம் உல் ஹக் அணித்தலைவராக இருந்தபோது, இதே பர்மிங்ஹாம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
தற்போதைய பாகிஸ்தான் அணி மீண்டும் அதை செய்யும் எனவும் இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.