வர்த்தக நிறுவனங்களை இணைய வசதியூடாக பதிவு செய்ய நடவடிக்கை..

2018ம் ஆண்டு முதல் வர்த்தக நிறுவனங்களின் பதிவு நடவடிக்கைகளை இணையத்தளம் வாயிலாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தக நிறுவனங்களை இணையத்தளம் வழியாக பதிவு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான ஒப்பந்தமொன்று நேற்று(30) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அத்துடன், நிறுவனங்கள் பதிவாளர் டீ.என்.ஆர் சிறிவர்த்தன மற்றும் கே.பி.எம்.ஜி தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான குறித்த ஒப்பந்தம், வர்த்தக – கைத்தொழில் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

தற்போதைக்கு ஒரு நிறுவனத்தை பதிவு செய்வதாயின் ஆவணங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு வர்த்தகர்கள் அலைந்து திரிந்து நேரத்தை விரயம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

இதற்குப் பதிலாக அடுத்த வருடம் முதல் இணையத்தளத்தின் ஊடாக பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதன் ஊடாக அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

(rizmira)