2017ம் ஆண்டுக்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி’யால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மறுசீரமைப்பு..

2017ம் ஆண்டுக்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மறுசீரமைக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக செயற்பட்ட காலத்தில் கடைசியாக 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்திருந்தார்.

இதில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைய அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

இதற்கான மாற்றுத் திட்டமாக வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டு இதுவரை ஆரம்பிக்கப்படாத அபிவிருத்தித்திட்டங்களுக்கான நிதியை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு மாற்ற அரசு தீர்மானித்துள்ளது

இதற்காக 2017ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தை மறுசீரமைத்து, போதிய நிதி திரட்டிக் கொள்ளப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக்குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹஷீம் ஆகியோர் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)