முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் கருத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சம்பிக்கவே மறைத்து வைத்திருக்கின்றார் என நேற்று(12) திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு நேற்று(12) கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க;
“.. ஒரு காலத்தில் மிகச் சிறந்த முக்கிய கட்சிகளாக திகழ்ந்து தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ள அரசியல் கட்சிகளின் அரசியல் அனாதைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை.
பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவிய அவர்களுக்கு பால் ஊட்டிய, அவர்களுக்கு வாகனம் வழங்கிய கோத்தபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் இந்தக் கேள்வியை திஸ்ஸ விதாரண எழுப்ப வேண்டும்.
மஹிந்த, கோத்தபாயவிடம் இது பற்றி கேட்க முடியாவிட்டால் அவர்களின் சார்பில் கடந்த காலங்களில் வழக்குகளில் முன்னிலையாகிய சட்டத்தரணிகளிடம் இதனைக் கேட்க முடியும்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திஸ்ஸ விதாரண தரப்பு இந்தக் குற்றவாளிகளுடனே இருந்ததார் என்பதனை நினைவில் வைத்திருக்கட்டும்..” என சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இணைப்புச் செய்தி
ஞானசார தேரரினை மறைத்து வைத்திருக்கும் அமைச்சரின் பெயரினை திஸ்ஸ ஊடக முன்னிலையில் வெளிப்படுத்தினார்…