UPDATE – பொதுபல சேனா அமைப்பின் செயலாளருக்கு ஒரே நாளில் மூன்று பிணைகள்..

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரே நாளில் மூன்று பிணைகள் வழங்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு வழக்குகளிலேயே அவருக்கு இவ்வாறு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன.

காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த தேரர் இன்று(21) காவற்துறை குற்றத் தடுப்பு ஒழுங்கமைப்பு குழுவினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, இன மற்றும் மதத்திற்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலையான கலகொட அத்தே ஞானசார தேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்ஹ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி அவர் 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தமது சட்டத்தரணிகள் ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரர் சரணடைந்த போது, அவர் முன்பிணையில் செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கினார்.

அத்துடன், அவருக்கு எதிராக கடந்த 15ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெறவும் நீதவான் உத்தரவிட்டார்.

முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வடரெக விஜித தேரர் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் பலாத்காரமாக உள்நுழைந்து அச்சுறுத்தியமை தொடர்பாக ஞானாசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)