ஷாங்காய் விமான நிலையத்தில், மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பெண்மணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது நாணயங்களை வீசியதை அடுத்து, China Southern Flight 380 என்ற அந்த விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
80 வயதான அந்த பெண்மணி தன்னிடம் இருந்த நாணயங்களை தனது பாதுகாப்பிற்கு பிரார்த்திக்கும் விதமாக வீசியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஒன்பது நாணயங்களை வீசியதில், ஒரே ஒரு நாணயம் அவர் இலக்கு வைத்தபடி இயந்திரத்தின் மீது வீழ்ந்துள்ளது.
இந்த பெண்மணி பாதுகாப்பான விமானப் பயணத்திற்காக நாணயங்களை வீசும் விநோத நடத்தையைக் கவனித்த ஒரு பயணி, உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததை அடுத்து, ஷாங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்
தனது கணவர், மகள் மற்றும் மருமகளுடன் பயணம் செய்த அந்தப் பெண்மணி விசாரணைக்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, China Southern நிறுவனத்தின் பராமரிப்புப் பிரிவு, விமானத்தின் இயந்திரத்தை முழுமையாக பரிசோதித்துள்ளது.
அனைத்தும் சரியான முறையில் இருப்பதாக சான்றளிக்கப்பட்ட பின்னர், 5 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.