பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில், கொழும்பின் நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரி ஆனந்த சமரகோனை, இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் விசாரணைக் குழு, சந்தேகநபராக இனங்கண்டுள்ளது.
இதன்பிரகாரம், நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரியின் அங்கத்துவம், 6 மாதகாலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
7 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழுவினால், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது, வஸீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனை அறிக்கையை, முறையற்ற விதத்தில் வைத்திருந்தமை, சில உடற்பாகங்களை பாதுகாக்காமை, அவருக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஒழுங்காக செய்யாமல் இருந்தமை போன்ற மூன்று காரணங்களுக்காக, அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னரே, இது தொடர்பில் கண்டறியப்பட்டதாகவும் இது தொடர்பாக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும், அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.