தென்சீன கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பலின் பயணத்திற்கு சீனா கடும் கண்டனம்..

தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு அருகே அமெரிக்காவின் போர்க்கப்பல் பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்சீன கடற்பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பராசெல் தீவு கூட்டங்களில் ஒன்றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த தீவு தங்களுக்கு சொந்தமென தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும் கூறி வருகின்றன.

தென்சீன கடல் பகுதி முக்கிய வர்த்தக மையமாக உள்ள நிலையில் அங்கு சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று டிரைடன் தீவை நெருங்கும் வகையில் தீவில் இருந்து 12 மைல்கள் (22 கிலோ மீட்டர்) தொலைவில் நேற்று(02) பயணம் செய்துள்ளது.

கடல்வழி பகுதிகளில் சுதந்திரமுடன் அனைத்து கப்பல்களும் சென்று வருவதனை எடுத்து காட்டும் வகையில் இந்நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு அருகே அமெரிக்காவின் போர்க்கப்பல் பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குறித்த இந்நடவடிக்கை தீவிர அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல் செயல் என்று எச்சரித்துள்ள சீனா, இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

 

(rizmira)