இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியும், அவர்களுக்கு எதிராக இந்தியா ஆதாரங்கள் வழங்கியும், அவர்கள் மீது அந்நாடு நடவடிக்கை எடுக்காததால், இரு நாடுகள் இடையே நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தை முடங்கிப்போனது.
இந்நிலையில், தற்போது பதவியேற்றுள்ள புதிய பிரதமரான ஷாகித் ககான் அப்பாசி ‘ரேடியோ பாகிஸ்தான்’ இற்கு அளித்துள்ள பேட்டியில்;
“பாகிஸ்தானின் தேசிய நலன்களை சமரசம் செய்து கொள்ளாமல், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமநிலை அடிப்படையில் இந்தியாவுடனும், ஆப்கானிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
மேலும், “கராச்சியில் அமைதியும், சமாதானமும் நிலவாமல், பாகிஸ்தான் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது” என குறிப்பிட்ட அவர்,“கட்சியின் ஆதரவு எனக்கு கிடைக்கிற வரையில் நான் பிரதமராக தொடருவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.