ராம் ரஹீம் பாலியல் வழக்கின் தீர்ப்பினால் சுமார் 31 பேர் பலி.. 250 பேர் வைத்தியசாலையில்..

சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று(25) தீர்ப்பளித்துள்ள நிலையில், ஹரியானாவில் பரவிய வன்முறையாலும், அதற்கு எதிர்வினையாக பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

வன்முறை, தீவைப்பு, பொலிஸ் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்வடைந்துள்ளமையினாலும் வன்முறை மையம் கொண்டிருந்த பஞ்ச்குலா நகரின் பொலிஸ் துணை கமிஷனர் அசோக்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பகுதியில் இரண்டு இராணுவ படை அணிகளும், 10 துணை இராணுவப் படை அணியினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002ஆம்ஆண்டு இரண்டு பெண்கள் அளித்த பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில் தற்போது 50 வயதாகும் தேரா சச்சா சௌதாவின் தலைவரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பளித்தார்.

இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ராம் ரஹீம் சிங்குக்கு என்ன தண்டனை என்பதை ஆகஸ்ட் மாதம் 28-ம் தகதி நீதிபதி அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

(rizmira)