பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..

தனியார் நிறுவனமொன்றுக்கூடாக 30 மில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின்பேரில் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய ஐந்து உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட ‘குரோவஸ்’ ஒன்றிணைக்கப்பட்ட சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நித்தியா சேனானி சமரநாயக்க மற்றும் சுஜானி போகொல்லாகம ஆகிய மூவரும் நேற்று(31) மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரனசிங்க முன்னிலையில் ஆஜராகினர்.

எவ்வாறாயினும் 2ம், 4ம் மற்றும் 6ம் சந்தேக நபர்களுக்கு பதிலாக அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன் காரணமாக நீதவான் குறித்த இந்த வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். முன்னொரு சந்தர்ப்பத்தில் கொழும்பு மேல் நீதிமன்றம் பண பரிமாற்றம் சம்பந்தமாக மேற்படி மூவர் மீதும் குற்றம் சாட்டியிருந்தது. ஊழலுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க, ‘குரோவஸ்’ நிறுவனம் மற்றும் அதில் முன்னெடுக்கப்பட்ட பணப்பரிமாற்றம் என்பன தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நிதி மோசடி விசாரணைப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)