நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு என்பவரும் இதற்காக போராடியுள்ளார்.
இதனால் அவரை கைது செய்து இந்திய பொலிசார் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து அவர் பேசும்பொழுது;
“..நீட் தேர்விற்கு எதிராக கடந்த 7-ம் திகதி WTO அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக கைது செய்த பொலிசார் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எங்களை 15 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற பொலிசார், ‘பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்றும் கூறினர்.
நான் எதற்கு உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும் என மறுப்பு தெரிவித்து பலமணி நேரம் போராடினேன். என்னுடைய பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்தனர். அதைவிடக் கொடுமை, அறுவை சிகிச்சை செய்து கொண்ட இடத்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன்.
எங்களை பெண்கள் அல்லது ஆண்கள் சிறையில் வைக்க வேண்டும். ஆனால் தொற்று நோயுள்ள கைதிகளை அடைத்து வைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்து வைத்தனர்..” என கூறினார்.