வட, கிழக்கில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேற்படி ஹோட்டல்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், நாட்டுக்குள் ஊடுறுவியுள்ள மொசாட், சீ.ஐ.ஏ மற்றும் றோ ஆகிய உளவுப் பிரிவினர் மிக நுட்பமான முறையில் ஆட்சியாளர்களை வழி நடத்துகின்றனர் எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.
மேலும்கூறுகையில்; இதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பாரியளவில் தாக்கம் ஏற்படக் கூடிய அபாயகர சூழல் உருவாகியுள்ளது. போர் வீரரான ஹசல காமினி ஒர் விசரன் எனக் கூறும் அளவிற்கு நாடு சீர்குலைந்துள்ளது.
இவை வெறுமனே எதேற்சையாக நடைபெறுபவை அல்ல. மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச சூழ்ச்சித் திட்டமாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரும், பிரபல அரசியல்வாதி ஒருவரும் மத மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
தற்போது நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் சஞ்சரிக்கின்றனர். இவர்கள் யார் எதற்காக வந்திருக்கின்றார்கள் என எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய் என எவரேனும் கூற முன்வந்தால் சாட்சியங்களுடன் அவற்றை நிரூபிக்கத் தயார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்படிக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.