மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 149 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இலங்கை நேரப்படியில் நேற்று(19) நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்த கோர பேரழிவால் தற்போது வரை 119 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.
(rizmira)