ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் சந்திப்பு…

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதென்றும், அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்கு தெரிவிப்பதாக நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வமாக  நியூயோர்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் நேபாளப் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று(21) இடம்பெற்றது.

தெற்காசிய செயற்பாடுகள் தொடர்பில் இணைந்து செயற்படுவதற்காக பொது அமைப்பான சார்க் அமைப்பின் செயற்பாடுகளை தொடர்சியாக முரண்பாடுகளின்றி முன்னெடுக்க வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சார்க் அமைப்பின் செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பில் தாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பின் போது கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலுள்ள இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் மேலும் மேம்படுத்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தியதுடன் இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார, வர்த்தக, சமய மற்றும் பண்பாட்டு உறவுகளை புதிய அணுகுமுறை ஊடாக முன்னெடுப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட நேபாளப் பிரதமர், மனித உரிமைகள் செயற்பாடுகளிலும் நேபாளம் எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.