கியூபாவில் மீண்டும் தூதரகங்களை திறப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட உள்ளார். உலகின் பரம எதிரி நாடுகளாக அமெரிக்காவும் கியூபாவும் கருதப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக இரு நாடுகளும் பகைமை பாராட்டி வந்தன. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் நட்புறவை ஏற்படுத்தும் விதமாக பனாமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சந்திப்பில், கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குவது தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் என அமெரிக்கா வைத்துள்ள பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவது தொடர்பாகவும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இப்பேச்சுவார்த்தையின் எதிரொலியாக இரு நாட்டு தலைநகரங்களான ஹவானா மற்றும் வாஷிங்டனில் தூதரகங்களை திறப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை அமெரிக்க ஒபாமா இன்று வெளியிட உள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள ரோஜா பூங்காவில் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை ஒபாமா அறிவிக்க உள்ளார்.
தனது அதிபர் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டுடன் நிறைவு பெறும் நிலையில், கியூபாவுடன் ஒபாமா மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது