இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உடலுக்கும், மனதுக்கும் ஒருசில பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. எனவே இதனை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
*தினமும் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதயமாகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறான எண்ணங்கள் தோன்றினாலும் அதனை மெதுவாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மனநிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
* கடினமான வேலைகளுக்கு பிறகு குளிர்ந்த நீரில் குளியல் போடலாம். ‘ஐஸ் குளியல்’ ரத்த ஓட்டத்தை மேம் படுத்த உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற துணைபுரியும். திசுக்களுக்கும் புத்துணர்ச்சி தரும்.
* சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைய செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை வடிகட்டும் குடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு உகந்த உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது. தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
* தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களை சுரக்கும்.
* மஞ்சள், இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். அது உடல் நலத்தை சுகாதாரமாக பேணுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம், வாதம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். புற்றுநோயை எதிர்த்து போராடும்.
* பச்சை நிற காய்கறிகளை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் வைட்டமின் கே அதிகமாக இருக்கிறது. இந்த வைட்டமின் குறைவாக இருந்தால் எலும்பு, இதயம், சிறுநீரகம் போன்றவை பலவீனமாகும். மேலும் பச்சை இலை காய்கறிகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் புற்று நோய் அபாயத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.
* மிளகையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது எடை குறைவுக்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். ஒற்றை தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
* தினமும் காலையில் 15 நிமிடங்கள் உடல்பாகங்கள் சூரிய வெளிச்சத்தில் படுமாறு நிற்க வேண்டியது அவசியம். அதன் மூலம் உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்துக்களை பெற்றுக்கொள்ளலாம். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள துணைபுரியும்.
* உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அவை சோர்வை ஏற்படுத்தி விடும்.
* அவ்வப்போது உடலை மசாஜ் செய்வதும் அவசியம். அது மன அழுத்தத்தை குறைக்கும். நரம்பு மண்டலம் சீராக இயங்க வழிவகை செய்யும். நிணநீர் முறையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
* வாரத்தில் மூன்று முதல் ஐந்து முறை முகத்துக்கு மசாஜ் செய்து வருவது நல்லது. அவை முக தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். எப்போதும் புன்னகையுடன் வலம் வருவதும் முகத்திற்கு பிரகாசம் சேர்க்கும்.