ப்ரோய்லர் கோழி இறைச்சியில் விச இரசாயனம்.. ப்ரோய்லர் இறைச்சி சாப்பிடுவோர் கவனத்திற்கு..

ப்ரோய்லர் கோழி இறைச்சியின் ஈரல்களில் விச இரசாயனம் கலந்திருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞான திணைக்களத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ப்ரோய்லர் கோழிகளை வளர்ப்பதற்காக ஹோர்மோன்கள், விட்டமின் வகைகள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கிய உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

கோழிகளின் குடல்களில் காணப்படும் சிறு புழு பூச்சிகளை அழிப்பதற்காக இரசாயனம் அடங்கிய பதார்த்தங்கள் வழங்கப்படுகின்றன.

அவை இயற்கையான முறையில் வழங்கப்பட்டாலும் வயிற்றுக்குள் விச இரசாயனமாக மாற்றமடைவதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கபப்டுகின்றது. பல்வேறு ப்ரோய்லர் கோழி இறைச்சியைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்ட போதும், ஈரல் பகுதியில் விசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இரசாயன விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் பீ.ஏ. பெரேரா தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியை உணவாக உட்கொள்ளும் போது முடிந்தளவு ஈரலை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது எனவும், நீண்ட காலத்திற்கு இவ்வாறான விச இரசாயனங்கள் உடலில் தேங்குவது புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து வகையான ப்ரோய்லர் கோழி இறைச்சிகளிலும் இவ்வாறு விச இரசாயனம் கலந்திருக்கவில்லை என்ற போதிலும், விச இரசாயனங்கள் கலந்திருக்கக் கூடிய சாத்தியம் உண்டு என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு இன்னமும் விரிவாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

(riz_mira)