கென்யாவில் தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக உச்ச நீதிமன்றத்திற்கு பொலிஸார் ‘சீல்’ வைத்துள்ளனர்.
கென்யாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றார். ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் அரசியல் குழப்பம் உருவானதையடுத்து இன்று(26) மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா அறிவித்தார்.
இதற்கிடையே இந்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தேர்தல் வாரியம் சரியாக செய்து முடிக்கவில்லை என்பதால் தேர்தலை இப்போது நடத்தாமல் தாமதப்படுத்த வேண்டும் என்று கூறி, மனித உரிமைகள் ஆர்வலர் கெலிப் கலிபா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று(25) விசாரிக்க தயாரானபோது, நீதிமன்றத்துக்கு பொலிசார் திடீரென சீல் வைத்ததுடன் உயர் நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் நுழைய முடியாதபடி தடுப்பு வேலிகளை பொலிசார் அமைத்துள்ளனர்.
அங்கு கலவர தடுப்பு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.