கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களை இணைத்து 6 இலகு ரயில் வீதிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கும் சந்தர்ப்பத்தை கொரிய நிறுவனத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அதற்கமைய 202 மில்லியன் ரூபாய்க்கு SYE மற்றும் Saman corporation ஆகிய நிறுவனங்களுக்கு இலகு ரயில் ஆலோசனை சேவை சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
குறித்த இந்த ரயில் வீதி நிர்மாணிப்பிற்காக சர்வதேச கேள்வி மனுக்கோரலின் போது 5 நிறுவனங்கள் திட்டங்களை சமர்ப்பித்துள்ளது.
கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசல்களை இல்லாமல் செய்வதும், பொது போக்குவரத்து கட்டமைப்பை இலகுபடுத்துவது இந்த இலகு ரயில் சேவையின் நோக்கமாகும்.
புதிய பயணிகள் போக்குவரத்து கட்டமைப்பை செயற்படுத்துவதற்கு குறித்த திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவுகளின் பங்களிப்பு திட்டமாக செயற்படுத்தப்படவுள்ளது.
பத்தரமுல்லை, கொட்டாவ, கடுவலை, மாலபே பிரதேசத்தை இணைக்கும் வகையில் இந்த வீதி கட்டமைப்பு தற்போது வரையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காணப்படும் இந்த ரயில் கட்டமைப்பு முறையை இலங்கையில் நிறுவுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.