“லக்செத செவன” வீடமைப்புத் தொகுதி மக்களிடம் கையளிப்பு…

நகர மீள்கட்டமைப்புச் செயற்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாளிகாவத்தை லக்செத செவன வீடமைப்புத் தொகுதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வீடமைப்புத் தொகுதியை நேற்று(13) திறந்து வைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டதுடன் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிவைக்கும் முகமாக 10 பயனாளிகளுக்கு வீட்டுச் சாவியை வழங்கி வைத்துள்ளார்.

மாளிகாவத்தை அப்பிள் தோட்டத்தில் வசித்த 400 குடும்பங்களுக்கும், கொழும்பு தலைநகர செயற்திட்டத்தினால் தமது வசிப்பிடங்களிலிருந்து அகற்றப்படவுள்ள குடும்பங்களுக்கும் இவ்வீடமைப்புத் தொகுதியில் வீடுகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்பு நகரில் குறைந்த வசதிகளையுடைய குடியிருப்புக்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு நவீன வசதிகளையுடைய நிலையான வீடுகளை வழங்கி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்குடன் நகர மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தின் ஊடாக 50,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அந்த வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இத்திட்டத்தின் கீழ் தற்போது 6,077 வீடுகள் நிர்மாணிப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேக்கா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் வீடுகளை பெறும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.