ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுதலை…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சவூதி இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் மந்திரிகள் உட்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை இருக்கிறது என அவர் அறிவித்தார்.

இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மற்ற இளவரசர்களில் பலர் முக்கிய துறைகளை வகிக்கும் மந்திரிகளாக இருந்து வந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமூகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இளவரசர் மிதெப் பின் அப்துல்லா சுமார் 3 வாரங்களுக்கு பின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என இந்த தகவலை முக்கிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.