ரயில்வே வேலைநிறுத்தம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை, மேலதிகமாக 1750 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான ரயில் சாரதி மற்றும் ரயில் ஊழியர்களின் கூட்டான பணிபகிஷ்கரிப்பு காரணமாக பொது மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். இதனால் இலங்கை போக்குவரத்து சபை நாடு தழுவிய ரீதியில் தனது சேவைகளை விரிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
பொதுவாக இலங்கை போக்குவரத்து சபையில் நாளாந்தம் 5700 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துகின்றது. ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் காரணமாக 1000 பஸ்களை சேவையில மேலதிகமாக ஈடுபடுத்தியுள்ளதுடன் பாடசாலை விடுமுறை காரணமாக பாடசாலை சேவைக்காக பயன்படுத்தப்பட்ட 750 பஸ்கள் தூர இடங்களுக்கான சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 60 சொகுசு பஸ்களும் பொது மக்களின் வசதிக்காக சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பஸ்களில் ரயில் பருகாலசீட்டை கொண்டவர்களுக்கும் முன்கூட்டியே ஆசனங்களை ஒதுக்கீடு செய்தவர்களுக்கும் எந்தவித கட்டணமும் இன்றி போக்குவரத்து வசதியை பெற்றுகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் ஸ்ரீறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட சுட்டறிக்கை ஒன்று அனைத்து டிப்போக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பருவகாலசீட்டின் மூலம் பயணிக்க முடியாதென்று தெரிவிக்கும் எத்தகைய நடத்துனர்களுக்கு எதிராக ஒழுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சபை தலைவர் தெரிவித்துள்ளார்.