இங்கிலாந்து நாட்டில் துணைப்பிரதமராக இருந்து வந்தவர் 61 வயதான டாமியன் கிரீன். இவர் பிரதமர் தெரசா மேயின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார்.
டாமியன் கிரீன் கணினியில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிர்வாணப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் மால்ட்பி என்ற பெண் பத்திரிகையாளரிடம் 2015 ஆம் ஆண்டு தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தன் மீது நடந்த விசாரணையில் டாமியன் கிரீன் தவறான தகவல்களை அளித்தது தெரிய வந்தது. மால்ட்பியின் பெற்றோர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ‘விசாரணையில் டாமியன் கிரீன் மந்திரியாக இருந்து கொண்டு உண்மையில்லாதவராக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் மகள் துணிச்சலுடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டனர்.
இந்தப் பிரச்சினை இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் துணைப்பிரதமர் டாமியன் கிரீன் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தெரசா மே அதிரடியாக முடிவு எடுத்தார். அவரைப் பதவி விலகும்படி உத்தரவிட்டார். இதன் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தெரசா மேயுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். டாமியன் கிரீன் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் தெரசா மே ‘அவர் பதவி விலக நேரிட்டது வருத்தம் அளிக்கிறது. இருந்தபோதிலும் ஒரு கேபினட் மந்திரிக்கு உரிய நடத்தையாக அவரது செயல்கள் இல்லை’ என்று குறிப்பிட்டார்.
####