கல்வி, சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கு அரசாங்கம் முன்னுரிமை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கம் நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட உறுதிகொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அபிவிருத்தியை முக்கியமான அம்சமாக கருத முடியுமென்று அலரிமாளிகையில் நேற்று(04) இடம்பெற்ற சிறிய அளவிலான மூவாயிரம் பாடசாலைகளுக்கு நடமாடும் ஆய்வு கூடங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான விளக்கமளிப்பு கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு உரையாற்றினார்.

இன்றைய உலகம் தொழில்நுட்ப புரட்சியைச் சந்தித்துள்ளது. இந்தப் புரட்சி இலங்கையிலும் கால்பதித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சி வழியாக முன்னேறிச் செல்ல சகல பிள்ளைகளுக்கும் விஞ்ஞான அறிவை பெற்றுக் கொடுப்பது அவசியம். இதற்காக விஞ்ஞான உபகரணங்களை வழங்கி விஞ்ஞான ஆசிரியர்களைப் பயிற்றுவித்து ஆங்கில அறிவை மேம்படுத்தப் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கணித விஞ்ஞான பொறியியல் தொழில்நுட்பத் துறைகளை தரத்திலும் அளவிலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் கீழ் 400 பாடசாலைகளில் விஞ்ஞான பாடநெறிகளை ஆரம்பித்து, 20 ஆயிரம் பிள்ளைகளுக்கு விஞ்ஞான பாடங்களை கற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.