70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட தீர்மானம்…

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாகவும், பெருமிதத்தோடும் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்கேற்புடன், ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

முப்படைகள் மற்றும் பொலிசாரின் பாரம்பரிய இராணுவ அணிவகுப்பிற்கு அப்பால் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் கலாசார நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் எலிஸபெத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட் கலந்துகொள்ளவுள்ளார். மேலும் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்குமாறு பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.