மத்திய வங்கியின் பிணை முறி விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.
அதைவிட குறித்த அறிக்கையில் இன்னும் 31 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த எந்த தகவலும் இதுவரையில் வெளிவரவில்லை என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
கொள்ளையர் மற்றும் ஏமாற்றுக் காரர்கள் என எங்களை சுட்டிக்காட்டுகின்றவர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களில் விளைவே இந்நிலைமையாகும். அக்கால அறிக்கைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவர்களின் காலத்தில் ஏற்பட்ட ஊழல்கள் என்னவென்பதை எதிர்வரும் காலங்களில் அம்பலப்படுத்துவோம்.
என்னை நோக்கிப் பாதாள உலக தலைவர் என விரல் நீட்டுகின்றனர். சிறந்தவொரு ஆட்சியாளர்களை உருவாக்குவது பாதாள உலகம் என்றால் அவர்கள் கூறும் கருத்து சரியானதே. ஆயினும் பாதாள உலக தலைவன் என்பதற்கான சரியான பதம் இன்னும் விளக்கப்படவில்லை என்றார்.
#g-reeshma