குளிர்கால ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா…

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் ஒரே கொடியின் கீழ் ஒன்றாக வடகொரியா மற்றும் தென்கொரியா அணிகள் அணிவகுத்துச் செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் தென்கொரியாவின் யியோங்சங் நகரில் நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அணியை அனுப்ப பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.

வடகொரியா – தென்கொரியா எல்லையில் உள்ள பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இரு நாட்டு உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடந்தது. இதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பது உறுதியாகியது.

இதற்கிடையே, இரு நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளன. டேக்வான்டோ தற்காப்புக்கலை வீரர்கள் 30 பேரை கொண்ட குழு, மாற்றுத்திறனாளிகள் போட்டிகளுக்கான 150 வீரர், வீராங்கனைகள் மற்றும் 230 ‘சீர்லீடர்ஸ்’ அடங்கிய குழு என மொத்தம் 550 பேர் கொண்ட குழுவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுப்பிவைக்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போட்டி தொடக்க நிகழ்ச்சியில் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஐஸ் ஹாக்கி போட்டியில், இரு நாடுகளும் இணைந்து ஒரே அணியாக களமிறங்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றத்தை தணிக்கும் விதமாக இது இருந்தாலும், இந்த திட்டத்திற்கு தென்கொரியாவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.