உலகில் முதல் முறையாக கடலில் சிக்கிய வாலிபர்களை ஆளில்லா விமானம் காப்பாற்றிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று(18) நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்களை அலை இழுத்துச் சென்று அவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர்.
இதனை கண்ட பாதுகாப்பு வீரர் ட்ரோனை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த ட்ரோன் உயிர்காக்கும் இறப்பர் பலூனை கீழே போட்டது. அதனை பிடித்து கொண்டு இருவரும் கரை வந்து சேர்ந்தனர். உலகில் முதல் முறையாக கடலில் சிக்கியவர்களை ட்ரோன் காப்பாற்றியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ட்ரோன்கள் கடலில் சுறா, திமிங்கலம் போன்ற பெரிய மீன்கள் வருவதை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யும். ஆஸ்திரேலியாவின் சில கடற்கரையில் சுறாக்களை தடுக்க வலை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இது மற்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த ட்ரோன் முறை மிகவும் சிறந்தது என கூறப்படுகிறது.