முகத்தில் எந்த இடத்திலும் பருக்கள் தோன்றலாம். ஆனாலும் இந்த பருக்கள், உதடு போன்ற இடங்களில் தோன்றும்போது, அது ஒரு வித எரிச்சலையும் வலியையும் கூடுதலாக தருகின்றன. உதட்டில் உண்டாகும் பருக்களுக்கு சரியான சிகிச்சையை கொடுக்காமல் இருக்கும்போது அது பல இடங்களுக்கு பரவும் தன்மை உண்டாகிறது.
இனி உதட்டில் பருக்கள் ஏற்படும்போது, இந்த எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி சிறந்த தீர்வை காணலாம்.
மஞ்சள் தூள் :
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் பருவில் தடவி 15 நிமிடம் கழித்து ஒரு ஈர துணியால் அதனை அகற்றி விடுங்கள். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். ‘
கேரட் எண்ணெய் :
3 துளி கேரட் எண்ணெயுடன் , 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக தடவி, 10 நிமிடம் கழித்து ஈர துணியால் சுத்தம் செய்யவும். ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்து வருவதால் நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும்.
கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போடவும். அதில் சிறிதளவு பஞ்சை முக்கி எடுத்து, பருக்களில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். ஒரு நாளில் 4 முதல் 5 தடவை இப்படி செய்வதால் விரைவில் உதட்டு பருக்கள் மறையும்.
க்ரீன் டீ :
இனிப்பு சேர்க்கப்படாத க்ரீன் டீயில் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். ஒரு வாரத்தில் 3 அல்லது 4 முறை இதனை செய்து வந்தால் விரைந்த நிவாரணம் கிடைக்கும்.