மாலைத்தீவில் அரசியல் நெருக்கடி – அவசர நிலையை திரும்ப பெற ஐ.நா. வலியுறுத்தல்…

மாலைத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் அவசர நிலை பிரகடனம் செய்திருப்பதை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலைத்தீவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக செயல்பட்ட ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து அதிபரின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதனால் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த அதிபர் அப்துல்லா, 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலையைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாலைத்தீவில் மோசமான நிலை உருவாகியுள்ளது. அதிபரின் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் அமைதி ஏற்படுத்த ஐ.நா. சபை, அமெரிக்கா ஆகியவையும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்தியாவும் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மாலைத்தீவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு ஐ.நா. தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

“மாலைத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அரசு விரைவில் திரும்ப பெற வேண்டும். மேலும் மக்கள் மற்றும் நீதித்துறை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.