மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச தரம் குறித்து வர்த்தமானி அறிவித்தல்…

மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச தரம் குறித்த மருத்துவ சபையின் பரிந்துரைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து சங்கத்தின் உப செயலாளர் நவிந்த சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச தரம் குறித்து மருத்துவ சபையின் பரிந்துரைகளை புறக்கணித்து, அமைச்சரவை தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளும்பட்சத்தில் அதற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயற்படும்.

மருத்துவ சபை வழங்கிய பரிந்துரைகள் திரிபுபடுத்தப்பட்டு வேறு பரிந்துரைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை இரத்து செய்து மருத்துவசபையின் பரிந்துரைகளை வர்த்தமானியில் அறிவிக்க ஜனாதிபதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதவிர, கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பிரிவில் இணைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.