நாட்டின் வான்பரப்பில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று(26) வெளியிட்டு;ள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் கிழக்கு, ஊவா, மத்திய சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் (100 மில்லிமீற்றருக்கு அதிகமான) பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரையிலான) ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலின்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.