முன்கூட்டியே வெளியிடப்பட்ட காலா…

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் நேற்று(01) வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று(02) காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று(01) நள்ளிரவு 12 மணியளவில் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் கரிகாலன் என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

இந்த டீசரில், குறிப்பாக ரஜினி பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காலா – என்ன பேருய்யா என்ற நானா படேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற சமுத்திரக்கனியின் பதில் பின்னணியில் ஒலிக்கின்றது.

நேற்று இரவு வெளியாகிய காலா டீசரை 11 மணிநேரத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர்.

`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா,இரஞ்சித் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.