மருந்து வகைகளின் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை…

மருந்து வகைகளின் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(04) இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

புற்றுநோய், இருதய நோய் போன்ற பாரிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருந்து வகைகளின் விலைக் குறைப்பு காரணமாக மக்கள் பெரும் நன்மையடைந்திருந்த போதிலும், ஊடகங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். சில மருந்து வகைகளின் விலைகள் பல மடங்காக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசிய ஒளடத அதிகார சபையின் தலைவர் ஹசித டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

அரசாங்கத்தின் இந்தவிலை குறைப்புக்கான நடவடிக்கையின் மூலம் 900 கோடி ரூபா இலாபம் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

48 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால், பல்வேறு விற்பனை நாமத்தின் கீழான ஆயிரம் மருந்து வகைகளின் விலைகள், குறைந்திருப்பதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட தனியார் மருந்து விற்பனையாளர்களின் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த மேலும் தெரிவித்தார்.