தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 22ம் திகதி…

மாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடாத்த சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக் குழு தீர்மானித்துள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபை தேர்தல் தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்யும் சட்டமூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

குறித்த இந்த புதிய முறைமையின் கீழ், 50% வட்டார முறைமையிலும், 50% விகிதாசார முறைமையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இதன்படி புதிய மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக, முன்னாள் நில அளவீட்டு ஆணையாளர் நாயகம் கணகரத்தினம் தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த குழு தமது அறிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.