இலங்கையின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 550Km தூரத்திற்கு நகர்ந்துள்ளதாகவும், இது நாட்டை விட்டு விலகி அராபியக் கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் இன்று(14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது;
மேலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வவுனியா, மன்னார், புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் (75mm அளவான ) ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியுடன், வடமத்திய மாகாணத்திலும் காலி மாவட்டத்திலும் (மணித்தியாலத்துக்கு 50Km வரையான) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.