பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பின்னர் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவினை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒருவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது தானும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு கட்சியின் தலைவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.