பித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு என்று சொல்லப்படும் இந்த பிரச்சினை பொதுவாக நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் இந்த வெடிப்புகள் ஆழமாகி விடும் போது, நாம் நிற்கும் போதோ அல்லது நடக்கும் போதோ வலிகளையும், அசௌகரியங்களையும் இது ஏற்படுத்தி விடும்.
தோல்கள் உலர்ந்து, தடித்து காணப்படுவது இதனுடைய பொதுவான அறிகுறிகள். சில நேரங்களில் அரிப்பு, தோல் சிவத்தல், வீக்கம், தோல் உரிவது கூட ஏற்படலாம்
எளிய வீட்டு மருந்துகள் மூலமாகவே இதனை நன்கு குணப்படுத்தி விடலாம்.
எலுமிச்சை:
இளம் சூட்டில் உள்ள நீரில் எலுமிச்சை சாறு கலந்து, நமது பாதங்களை சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் அதில் மூழ்கி இருக்குமாறு செய்ய வேண்டும். ஆனால் கொதிக்கும் நீரில் இதை செய்ய கூடாது. அப்படி செய்தால் பாதங்கள் மேலும் வறண்டு விடும். அதன் பிறகு ஸ்கிரப்பர் போன்ற சொசொரப்பான நுரைக்கல்லால் பாதங்களை நன்கு தேய்த்து கழுவி, டவலால் பாதங்களை நல்ல துடைத்து கொள்ள வேண்டும்.
ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்:
பன்னீரையும், கிளிசரினையும் சமமான அளவில் கலந்து, இரவு உறங்கும் முன் பாதங்கள் முழுவதும் தடவி வர பாத வெடிப்புக்கு சீக்கிரமே குட்பை சொல்லிடலாம்.
பெட்ரோலிய ஜெல்லி:
வெவெதுப்பான நீரில் பாதங்களை சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் இருக்குமாறு செய்து, பிறகு ஒரு துணியை கொண்டு நல்ல துடைத்து விட வேண்டும். பின் பெட்ரோலிய ஜெல்லி ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு சில துளிகள் கலந்து பாதங்கள் முழுவதும் தடவி வர வேண்டும். தினமும் தூங்க போகும் முன் இதை செய்ய வேண்டும்.
தேன்:
அரை பக்கெட் இளம் சூடான நீரில் ஒரு கப் தேன் கலந்து, பின் இதில் கால்களை ஒரு 15-20 நிமிடங்கள் நன்கு மூழ்கி இருக்குமாறு செய்ய வேண்டும். பின் பாதங்களை மென்மையாக தேய்த்து விட்டால் பாதங்கள் மிருதுவாகும். இதை அடிக்கடி செய்து வர பாத வெடிப்பு விரைவில் மறைந்து விடும்.
அரிசி மாவு:
அரிசி மாவு மூன்று டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் இவற்றை கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின் நமது பாதங்களை சுமார் பத்து நிமிடங்கள் வெவெதுப்பான நீரில் மூழ்கி இருக்குமாறு செய்த பின் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அரிசி மாவு பேஸ்ட் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பாதங்கள் புத்துயிர் பெறும்.
தேங்காய் எண்ணெய்:
தினமும் உறங்கும் முன் பாத வெடிப்புகளில் தேங்காய் எண்ணெய் தடவி, பிறகு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். அடுத்த காலையில் குளிக்கும் போது, பாதங்களையும் தேய்த்து விட்டால் போதும், வெடிப்புகள் விரைவில் மறைந்து விடும்.
பேக்கிங் சோடா:
பக்கெட்டில் 2/3 அளவில் இளம் சூடான நீர் எடுத்து கொண்டு, அதில் பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா நல்ல கரைந்த பின், நமது கால்களை 10-15 நிமிடங்களுக்கு அதில் மூழ்கி இருக்க செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை நுரைக்கல்லால் மெதுவாக தேய்த்து, நீரில் நன்கு கழுவி விட வேண்டும்.
கற்றாழை ஜெல்:
இளஞ்சூட்டு நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் பாதங்களை துணி கொண்டு நன்கு துடைத்து பாதம் முழுவதும் கற்றாழை ஜெல் தடவி சாக்ஸ் அணிந்து உறங்கி விடலாம். இதை தினமும் செய்து வந்தால், நான்கு அல்லது ஐந்து நாட்களில் பாதங்களில் மிகப்பெரும் மாற்றத்தை உணரலாம்.